Wednesday, December 10, 2014

தாய் மூகாம்பிகை சிறப்பு…

தாய் மூகாம்பிகை சிறப்பு…

கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் mugabikaiசௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர், தேவி பராசக்தியைக் குறித்து தவம் புரிந்தார். உலகிலேயே பழமையான மலையாக மேற்குத் தொடர்ச்சி மலை கருதப்படுகிறது. அதன் உட்பிரிவே குடசாத்ரி என்ற புனிதமலை. முனிபுங்கவர்களும் சித்தபுருஷர்களும் இன்றும் தவம் புரிந்து கொண்டிருக்கும் புண்ணிய பவித்ர இடம். அங்கு உற்பத்தியாகும் நதி சௌபர்ணிகா எனப்படும். அதன் கரையில் பெரிய திருவடியான கருடன் தவம் செய்து தன் வம்சத்தில் ஏற்பட்டிருந்த கொடிய சாபங்களையும் தோஷங்களையும் போக்கிக் கொண்டார்.

கருடபகவானின் பெயர்

சுபர்ணன் என்பதால் அந்த ஆறு சௌபர்ணிகா எனப்பட்டது. அவ்வளவு மகிமை வாய்ந்த அந்த இடத்திலிருந்து கோலமாமுனிவரின் பக்தியை மெச்சி, சுயம்பு லிங்கம் தோன்றியது. அதைக் கண்ட முனிவர் பக்தி பரவசத்தோடும் பய பக்தியோடும் அந்த சுயம்பு லிங்க மூர்த்தத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். அந்த இடம் கோலாபுரம் என அழைக்கப்பட்டது. அந்த லிங்கம் ஜோதிர் லிங்கம் என பக்தர்களால் கொண்டாடப் பட்டது. அச்சமயத்தில் கம்காசுரன் எனும் கொடிய அரக்கன் ஈசனைக் குறித்துக் கடுந்தவம் செய்தான். அவனுக்கு வரமருள ஈசன் புறப்பட்டார். அதைக் கண்டு திகைத்த தேவர்கள் நான்முகனிடம் சரணடைய, நான்முகன் தனது துணைவியான வாக்தேவியின் வடிவமான சரஸ்வதியை அழைத்து அந்த கம்காசுரனை பேச்சற்றவனாக்க ஆணையிட்டார்.



அதனால் வரம் எதுவும் கேட்க முடியாத அந்த கம்காசுரன் பேச்சிழந்ததால் மூகாசுரன் என்றானான். வரம் ஏதும் கேட்க முடியாத ஆத்திரத்தோடு அலைந்த அவன், கோலமாமுனிவர் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து அவரைத் துன்புறுத்தினான். அவர் தவத்திற்கு பல இடையூறுகளைச் செய்தான். அதனால் மனம் வருந்திய முனிவர் பரதேவதையிடம் முறையிட்டார். தன் பரிவாரங்களோடு தேவி, அஷ்டமி தினத்தன்று நடுநிசியில் மூகாசுரனுடன் போரிட்டு அவன் தலையைத் துண்டித்தாள். அவன் இறப்பதற்கு முன் தேவியிடம், ‘‘அம்மா தங்கள் கையால் மடிவதால் என் பாவங்கள் தொலைந்து நான் சுத்த ஆத்மாவானேன். இந்த திவ்ய திருத்தலத்தில் உனது பெயர் நிலைத்திருக்கும்வரை எனது பெயரும் நிலைக்க வேண்டும்’’ என வரம் கேட்டான்.

தேவியும் அவனுக்கு அந்த வரத்தை அருளி மூகாம்பிகையாய் கோலமா முனிவர் பூஜித்த ஜோதிர் லிங்கத்தில் ஸ்வர்ண ரேகையாகக் கலந்தாள். இந்த ஸ்வர்ண ரேகையை அபிஷேக காலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். இதன் இடது புறம் நான்முகன், ஈசன், திருமால்; வலது புறம் அலைமகள், கலைமகள், மலைமகள் உறைகிறார்கள். இந்த சுயம்பு லிங்கத்தை வழிபட்டால் முப்பத்து முக்கோடி தேவ தேவியர்களையும் வழிபட்ட பலன் கிட்டும். அபிஷேகம் அனைத்தும் இந்த சுயம்பு லிங்கத்திற்கே செய்யப்படுகிறது. 51 சக்தி பீடங்களுள் இது ஒன்று இல்லை எனினும், இது அர்த்தநாரிபீடம் என வழிபடப்படுகிறது.

தேவியின் அருளாணைப்படி ஆதிசங்கரர் ஐம்பொன்னால் ஆன மூகாம்பிகை தேவியின் திருவுருவை கொல்லூரில் பிரதிஷ்டை செய்தருளினார். முக்கண்கள், சங்கு, சக்கரம், அபய, வரதம் ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் அமர்ந்து முப்பெருந்தேவியரின் அம்சமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை போன்றவை மட்டுமே இந்த மூகாம்பிகைக்கு செய்யப்படுகின்றன. கிரகண நேரத்திலும் கருவறை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும் திருத்தலம் இது. மூகாம்பிகையை பூஜிக்க, பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. மூகாம்பிகையின் பின்புறம் பஞ்சலோகத்தினாலான காளி, சரஸ்வதி தேவியர் அருள்கின்றனர். அக்கினி தீர்த்தம், காசி தீர்த்தம், சுக்ல தீர்த்தம், மது தீர்த்தம், கோவிந்த தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம் ஆகியவை இத்தல தீர்த்தங்கள்.

இந்த அம்பிகையின் ஆபரணங்கள் விலை மதிப்பற்றவை. முகாபரணம் முழுதும் தங்கத்தால் ஆனது. அதில் மரகதம், கோமேதக ரத்னங்கள், ஒளிர்கின்ற அழகு செய்யும் இந்திர நீலக்கற்கள், அழகு செய்யும் பச்சைக் கல் மூக்குத்தி, வைரத் தோடுகள் என சர்வாலங்காரங் களோடு துலங்குகிறாள். முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் இந்த மூகாம்பிகையிடம் நேர்ந்து கொண்டு தன் பிரார்த்தனை பலித்ததன் நன்றிக் காணிக்கையாக தங்க வாளை தேவிக்கு காணிக்கையாகச் செலுத்தினார். அதை இன்றும் ஆலயத்தில் காணலாம்.

பங்குனி உத்திரத்தில் கொடியேற்றி மூலநட்சத்திரத்தில் தேர்த்திருவிழா காண்கிறாள் அம்பிகை. அவ்விழாவின்போது மூகாசுரன் கேட்ட வரத்தின்படி மூகாசுரனுக்கும் விழா எடுக்கப்படுகிறது. அதுவே தேவியின் கருணை. துர்க்காம்பிகைக்கு செய்யும் அர்ச்சனைகள் அவள் திருவடியில் வீற்றிருக்கும் மகி ஷனுக்கும் செய்யப்படுவதுபோல் இத்தலத்தில் தேவிக்கு எடுக்கும் விழாவில் மூகனும் கொண்டாடப்படுகிறான். சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகையின் சந்நதியில் உள்ள சரஸ்வதி தேவி கருவறையிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனமளிக்கிறாள்.

ஆதிசங்கரர் மூகாம்பிகை தேவி கலைமகள் அம்சமாகத் திகழ்வதால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க அம்பிகையை பிரார்த்தனை செய்து கலாரோகணம் எனும் துதியைப் பாடி தேவியின் திருவருள் பெற்றார். எனவே கல்வி, கலை வளம் செழிக்க பக்தர்கள் மூகாம்பிகையை பிரார்த்தனை செய்து பயனடைகின்றனர். விஜய தசமி இத்தலத்தில் வித்யா தசமியாகக் கொண்டாடப்படுவது விசேஷம். தன் ஸௌந்தர்யலஹரியை ஆதிசங்கரர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் அமர்ந்து எழுதியதாக ஒரு வரலாறு உண்டு. ஒரு முறை ஆதிசங்கரர் தேவியைக் குறித்து தவம் செய்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டார். அப்போது மூகாம்பிகை தேவி அவருக்கு கஷாயம் செய்து தந்து அவரைக் குணப்படுத்தியிருக்கிறாள்.

அதை நினைவூட்டும் வண்ணம் ஆலயத்தில் இன்றும் இரவு நேர அர்த்தஜாம பூஜை முடிந்த பின் கஷாய பிரசாதம் பக்தர்களுக்குத் தரப்படுகிறது. பலவித மூலிகைகள், குறுமிளகு, இஞ்சிப்பொடி, ஏலம், கிராம்பு, நெய், வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து செய்யப்பட்டு தேவிக்கு நிவேதிக்கப்படும் அந்த கஷாயத்தை பக்தியுடன் அருந்த சகல உடற்பிணிகளும் மனப்பிணிகளும் நீங்குவதாக பக்தர் கள் நம்புகின்றனர். அதேபோன்று முதல்நாள் இரவு சுயம்புலிங்கத்திற்குச் சாத்திய சந்தனக் காப்பில் ஸ்வர்ணரேகை பதிந்திருக்கும். அந்த சந்தனமும் சகல நோய்களையும் தீர்க்கும். அந்தப் பிரசாதம் கிடைக்கப் பெறுபவர்கள் மகாபாக்கியசாலிகளாகக் கருதப்படுகின்றனர்.

இந்த மூகாம்பிகை ஏவல், பில்லி, சூன்யம், துஷ்டதேவதைகளால் வரும் துன்பங்கள், சாபத்தால் தோன்றும் கோளாறு, தடை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் சர்வ வல்லமை படைத்தவள். ஒரு குடும்பத்தில் தீராத பிரச்னைகள் தொடர்ந்து இருந்து வருமேயானால், அவர்கள் இத்தலத்தில் ஓடும் சௌபர்ணிகை நதியில் நீராடி தூய மனதோடு தேவியை வழிபட அந்த பிரச்னைகள் தவிடுபொடியாகும். அனைத்து மதத்தினரும் வழிபடும் அற்புததேவி இந்த மூகாம்பிகை. . கர்நாடகாவில் உள்ள ஏழு முக்தி தலங்களுள் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் ஒன்றாகப் போற் றப்படுகிறது.

மற்ற ஆறு தலங்கள் உடுப்பி, சுப்ரமண்யா, கும்பகாசி, கோடேச்வரா, க்ரோடசங்கர நாராயணா, கோகர்ணம் ஆகியவையாகும். குடசாத்ரி மலையில் இருந்து இரண்டு கணவாய்கள் வழியாக ஆறு உற்பத்தியாகி கொல்லூர் வரும்போது சம்பாரா என அழைக்கப்படுகிறது. பல்வேறு மூலி கைத் தாவரங்கள் கலந்து வரும் இந்த ஆற்றில் விடியற்காலையில் நீராடினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மூகாம்பிகை தேவிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை ஆலயத்தில் உள்ள ஆயிரத்தெட்டு தீபங்கள் கொண்ட மரவிளக்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. மேலும் கருவறை முழுவதும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. வெள்ளியன்று இரவு தங்க ரதத்தில் மூகாம்பிகை திருவுலா வருகிறாள்.

அதைக் காண சகல தேவ தேவியரும் வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. இது அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் சதுர்வித புருஷார்த்தங்களையும் பக்தர்களுக்குத் தரும் என்பதைக் குறிக்கிறது.
தவி மூகாம்பிகையின் பாதங்களில் அர்ச்சனை செய்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்வதால், நான்முகன் நம் தலையில் எழுதிய கெட்ட எ ழுத்தும் குங்கும மகிமையால் அழிந்து விடுமாம். பூர்வ புண்ணியம் மேலோங்கப் பெற்றவர்கள் தம் வல்வினை நீங்கும் காலம் நெருங்கியவர்களே கொல்லூர் சென்று அங்கே கோலோச்சும் மூகாம்பி கையை தரிசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

அன்னை காளியிடம் பக்தி செலுத்தி நமக்கு உபாசனையின் மேன்மையை தன் புனித வாழ்வின் மூலம் நிரூபித்தவர் ஸ்ரீராமகிருஷ்ண பரம ஹம்ஸர். அவர் தன் சீடர்களிடம், ‘‘என்னைப் போன்ற முட்டாள் குழந்தையை அன்னை காளியைத் தவிர யாரால் நேசிக்க முடியும்?’’ என்று சொல்வா ராம். மேலும் ‘ஆலோபகோபவிதிதா’ என்றும் ஒரு நாமம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் உண்டு. அறிவு முதிர்ச்சியில்லாத சிறுவர்களாலும் இடையர்களா லும் கூட அறியப்படக்கூடியவள் என்று அது போற்றுகிறது. அவளுடைய குழந்தைகளாகிய நாம் அவளை எப்படி உபாசித்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அனுக்ரஹம் செய்வாள். பக்தியும் சிரத்தையுமே முக்கியம்.

http://aanmeegamarivom.blogspot.in/

No comments:

Post a Comment